தமிழகம்

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 144(1) உத்தரவு

இரா.வினோத்

பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 144 (1) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பன்ட் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவில் கடந்த சில தினங்களாக தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நீச்சல் குளம், கேளிக்கை விடுதி, விருந்து நிகழ்ச்சி நடத்தும் இடங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டது. ஏப்ரல் 20-ம் தேதி வரை பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி உள்ளிட்டவை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் புதன்கிழமை (நேற்று) முதல் குற்றவியல் நடைமுறை சட்டம் 144 (1)ம் பிரிவின்படி நீச்சல் குளங்கள் முற்றிலுமாக மூடப்படுகின்றன. உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள், மதுபான கடைகள் உள்ளிட்டவை 50 சதவீத இருக்கையுடன் இயங்க அனு மதிக்கப்படுகின்றன. பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

144 (1) உத்தரவு, தடை உத்தரவு இல்லை என்ற போதிலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே போலீஸார் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT