காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் வாழை மரம், தென்னை, மாவிலைத் தோரணம் கட்டி அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி. 
தமிழகம்

காரைக்குடியில் வாழை மரம், தென்னை, மாவிலைத் தோரணம் கட்டியிருந்த வாக்குச்சாவடி; பன்னீர் தெளித்து வாக்காளர்களுக்கு வரவேற்பு

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாழை மரம், தென்னை, மாவிலைத் தோரணம் கட்டியும், சிவப்புக் கம்பளம் விரித்தும், பன்னீர் தெளித்தும் வாக்காளர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

வாக்காளர்களைப் பன்னீர் தெளித்து வரவேற்ற ஊழியர்கள்.

காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் மழலையர் பள்ளியில் மூன்று வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த 3 வாக்குச்சாவடிகளிலும் 2,386 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் அந்தப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு பந்தல் அமைத்து வாழை மரம், தென்னை, மாவிலைத் தோரணம் கட்டி, சிவப்புக் கம்பளம் விரித்து இருந்தனர்.

மாதிரி வாக்குச்சாவடி அறை

மேலும், வாக்காளருக்குப் பன்னீர் தெளித்து, இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். வாக்குச்சாவடி அறை முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மின்விசிறி போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாக்களித்துச் சென்றனர். மேலும், வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கை கழுவி, முகச்கவசம் அணிந்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT