சேலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருந்த ரூ.16 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸார் அதிமுக நிர்வாகியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. சேலம், பெரிய கொல்லப்பட்டி எல்பி செட்டி தெருவை சேர்ந்த அதிமுக நிர்வாகி மாதேஸ்வரன் என்பவர் வீட்டில் பறக்கும் படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையிலான அலுவலர்கள் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டில் வைத்திருந்த 99 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் பறக்கும் படையினர் மாதேஸ்வரனை பிடித்து, கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் கைது செய்து, பணம் பட்டுவாடா செய்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.