சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் வரும் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, வாக்குப்பதிவு நடை பெறுவதையொட்டி இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வழக்கமான விற்பனையைவிட, 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக விற்பனை நடைபெறும் கடைகளை ஆய்வு செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
மது அருந்துவோர் கூட்டம் அதிகரிப்பு
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் 6-ம் தேதி (செவ்வாய்கிழமை) வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் மாலை முதல் மது வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. நேற்று பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்ததில் இருந்தே ஏராள மானோர், 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால், டாஸ்மாக் கடைகளில் நேற்று நாள் முழுவதும் மது அருந்துவோரின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.