வட இந்தியவர்களை அழைத்து வந்து அரசு வேலைவாய்ப்புகளை தாரைவார்த்தது அதிமுக அரசு என தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார்.
கோவை ஆலாந்துறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மக்களிடையே அவர் பேசியதாவது: தமிழகத்தில் மட்டும்தான் ஆண்களுக்கு நிகராக பெண்களும் படிக்கின்றனர். 50 ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. வேறு எந்த மாநிலமும் இந்த அளவு முன்னேறவில்லை. அதற்கு காரணம் கருணாநிதியின் அயராத உழைப்பு. எதிர்கட்சியில் இருந்தாலும் ஆளும்கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை போராடி அவர் முடிவு செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு நிறைய மாற்றுக் கருத்துகள் உள்ளன. ஆனால், அதிமுக ஆட்சியில் 2016 வரை அவர் தமிழகத்தின் நலனை டெல்லியில் அடகு வைக்கவில்லை. தைரியமாக எதிர்த்து நின்றுள்ளார். அவர் இறந்தாரா வேறு ஏதேனும் நடந்ததா என்பது தெரியவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் அதையும் கண்டறிந்து மக்களுக்கு தெரிவிப்போம். இந்தியாவில் அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. குஜராத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. நீட் தேர்வைக் கொண்டுவந்து முன்னேற்றத்தை திட்டம் போட்டு கெடுக்கின்றனர். வட இந்தியர்களை அழைத்துவந்து அரசு வேலைவாய்ப்புகளை தாரை வார்த்துள்ளது அதிமுக அரசு. இவ்வாறு அவர் பேசினார்.