புதுச்சேரியில் 42 ஆயிரத்தை கரோனா பாதிப்பு கடந்துள்ள நிலையில், புதிதாக 191 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண்(இன்று ஏப். 3) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,302 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 140, காரைக்கால் - 44, ஏனாம் - 1, மாஹே - 6 என மொத்தம் 191 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 684 ஆகவும், இறப்பு விகிதம் 1.62 ஆகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 42 ஆயிரத்து 132 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 363 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 1,111 பேர் என மொத்தம் 1,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 137 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 974 (94.88 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 6 லட்சத்து 78 ஆயிரத்து 772 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 26 ஆயிரத்து 27 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் 27 ஆயிரத்து 603 பேர் (57 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 796 பேர் (45 நாட்கள்), பொதுமக்கள் 33 ஆயிரத்து 760 பேர் (29 நாட்கள்) என மொத்தம் 75 ஆயிரத்து 159 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.