கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிந்து தொகுதிகளில் தொண்டர்கள் வலம் வருகின்றனர்.
தமிழகத்தில் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற ஒரு சில தினங்கள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்த கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையின் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முகக் கவசங்களை அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள வேட்பாளர்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட முகக் கவசங்களை அச்சிட்டு தொண்டர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதன்படி, விருகம்பாக்கம் தொகுதி, தியாகராயநகர் தொகுதி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பேரவை தொகுதிகளில் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடும் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் கட்சி சின்னங்கள் பொறிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிந்து வலம் வருகின்றனர். இது, வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.