மதுபானங்களுக்கு கரோனா வரி மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரியில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்துக்கு இணையாகவே விலை இருக்கும்.
புதுவையில் கரோனோ தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் தொடக்கத்தில் மதுபான கடைகள், மதுபார்கள் மூடப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு மே 24ம் தேதி மீண்டும் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்தது.
அப்போது, மதுபானங்களுக்கு கரோனா வரி விதிக்கப்பட்டது. இவ்வரி காலம் முதலில் ஆகஸ்ட் மாதம் வரை இருந்தது. அதையடுத்து நவம்பர் 30 வரை சிறப்பு கலால் வரி என நீட்டிக்கப்பட்டது.
இதனால் கரோனா பரவலை தடுக்கலாம் என்ற அடிப்படையில் கரோனா வரி விதிக்கப் பட்டுள்ளதாக ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார்.
அதையடுத்து நவம்பர் 29ம் தேதி கரோனா வரியை நீக்க அரசு தரப்பில் கோப்பு அனுப்பி கிரண்பேடி ஏற்கவில்லை. ஜனவரி 31ம் தேதி வரை இவ்வரியை நீட்டித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இரு மாதங்களுக்கு மதுபானங்களுக்கு கரோனா வரி நீட்டிக்கப்பட்டு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து மார்ச் 31ம் தேதியான இன்று நிறைவடைந்தது. ஆனால் இவ்வரியை மறு உத்தரவு வரும் வரை மீண்டும் இன்று நள்ளிரவு முதல் நீட்டிக்கப்பட்டது.
கரோனா வரியால் புதுவையில் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை உயர்ந்து உள்ளது தொடர்கிறது.