தமிழகம்

கூடுதலாக 1,200 பஸ்களை இயக்கியதால் சென்னைவாசிகள் பாதுகாப்பாக பயணித்தனர்: அரசு தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) மாலை முதல் இரவு வரை பயணிகள் நலன் கருதி 1200 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாகவும், இதனால் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடிந்தது என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "23.11.2015 திங்கள்கிழமையன்று மாலை முதல் இரவு வரை சென்னையில் பெய்த கனமழையினால் சாலைகளில் தண்ணீர் அதிகமாகி பேருந்து மற்றும் பிற வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்கள் இயங்காததால் பயணிகள் அதிக எண்ணிக்கையில் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்க நேர்ந்தது.

இதன் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மாலை முதல் 3,468 பேருந்துகளை பயணிகள் நலன் கருதி தொடர்ந்து இயக்கியது.

மேலும் இரவு 10.30-க்கு மேலும் மழையினால் பேருந்து நிலையங்களில் பயணிகள் காத்திருந்தனர். பயணிகள் நலன் கருதி சென்னை, சிஎம்பிடி, பிராட்வே, வள்ளலார் நகர் போன்ற முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து மாநகர் போக்குவரத்து கழகம் 1200 பேருந்துகள் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 01.00 மணி வரை கூடுதலாக இயக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT