ஜல்லிக்கட்டு நாயகன் பட்டம் பிரதமர் மோடிக்கு பொருந்தாது என மநீம தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் நீதி மையம் ஒரு சூப்பர் நோட்டா என்று கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், சிந்தித்து சொல்வது சிறந்தது, நான் அப்படித்தான் செய்கிறேன்.
தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை என்பது ஒரு மிரட்டல் உத்தியாகத் தான் இருக்கும். நியாயமான முறையில் வருமான வரித்துறை சோதனை நடக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து செய்யவேண்டும். ஆனால் பணப்பட்டுவாடா நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது மத்திய அரசின் மிரட்டல் போக்காகத்தான் உள்ளது.
மக்கள் அனைவருக்கும் வருகின்ற நோய் கரோனா. வேட்பாளர்களும் மக்களில் ஒருவர் தானே. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். எங்களது வேட்பாளர்கள் இருவருக்கு .கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .நானே மாஸ்க் போட்டுதான் வருகின்றேன். பேட்டிக்காக கழட்டியுள்ளேன்.
உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். அது ஏற்புடையது அல்ல.
மக்கள் நீதி மய்ய பிரச்சார வியூகம் அற்புதமாகச் சென்று கொண்டிருக்கிறது. வரவேற்பு அமோகமாக உள்ளது. கடிகார முள்ளுக்கு போட்டியாக சென்று கொண்டிருக்கிறேன்.
தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி உண்மையான அன்பு வைத்திருக்கிறார் என்றால் ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் வெளிநடப்பு செய்திருக்கக்கூடாது. அவர்கள் இலங்கை தமிழர்கள் என்று வெவ்வேறாக பார்க்கிறார்கள். அது அவர்களுக்குப் புரியும்போது புரியும்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகமே. பிறகு ஜாதி வாரியாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டபின் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஓபிஎஸ் இப்போது கூறியுள்ளார்.
அதைத்தான் நான் அப்போதிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். தற்போது ஐயா ஓபிஎஸ்.,க்கு புரிந்தது சந்தோசம். இவ்வாறு அவர் கூறினார்.