ஈபிஎஸ் - ஓபிஎஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

சுயேச்சையாகப் போட்டியிடும் இரு நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்; ஓபிஎஸ் - ஈபிஎஸ் நடவடிக்கை

செய்திப்பிரிவு

அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடும் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.லட்சுமி, கு.சடகோபன் ஆகியோரைக் கட்சியில் இருந்து நீக்கி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (மார்ச் 30) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:

"அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மாறி கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுகிற காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் ஆர்.லட்சுமி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளர் நெல்லை கு.சடகோபன் ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாற ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT