தமிழகம்

உலக சாதனை படைத்த ஈஷா மஹா சிவராத்திரி விழா

செய்திப்பிரிவு

கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை ஈஷாவில் ஆண்டுதோறும் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில், உலகம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டு கரோனா பரவல் காரணமாக, மிக குறைவான மக்களுடன் விழா பாதுகாப்பாக கொண்டாடப்பட்டது. சத்குருவுடன் நள்ளிரவு தியானம், பல்வேறு மாநில கலைஞர்களின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் மற்றும் ரஷ்யன், சைனீஸ், போர்ச்சுகீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் என மொத்தம் 13 மொழிகளில் நேரலை செய்யப்பட்டது.

மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 12 மணி நேரம் நடந்த இவ்விழாவில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பங்கேற்றனர்.

அதில் சமூக வலைதளங்களில் மட்டும் 2 கோடி பேர் பார்த்துள்ளதாக போல் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அன்றைய வாரம், உலக அளவில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சிகளின் பட்டியலில் இவ்விழா முதலிடத்தை பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் விழாவைக் கூட இது பின்னுக்கு தள்ளியுள்ளது. 2-ம் இடம் பிடித்த கிராமி விழாவை 1.3 கோடி பேர் மட்டுமே நேரலையில் பார்த்துள்ளனர்.

இதுதவிர, இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தொலைகாட்சிகள் மூலம் பல கோடி பேர் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய விழாவாகவும், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகவும் திகழும் மஹா சிவராத்திரி விழாவை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை ஈஷாவுக்கு கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT