தமிழகம்

ஏப்ரல் 2 முதல் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை உயரும்: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீசும் காரணத்தால், சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் வெப்பநிலை தற்போதுள்ள அளவை விட 3 டிகிரி வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“மார்ச் 29 (இன்று) தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

வரும் ஏப்ரல் 2 முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி வீசும் சாத்தியக்கூறுகள் உள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு

தென்காசி 3 செ.மீ., போடிநாயக்கனூர் (தேனி), செங்கோட்டை (தென்காசி) தலா 2 செ.மீ., சூரலக்கோடு (கன்னியாகுமரி), ஆயக்குடி (தென்காசி) தலா ஒரு செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டலச் சுழற்சி (upto 4.5 kilometer) அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாகவும் உருவாக வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக மார்ச் 29 அன்று மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மார்ச் 30 தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மார்ச் 31 அன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியானது (upto 5.8 km) அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தெற்கு அரபிக் கடலின் மத்தியப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களை மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT