வீட்டில் இருந்த படி தபால் வாக்கு செலுத்தும் மூதாட்டி 
தமிழகம்

வேலூரில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 2,895 பேர் தபால் வாக்குகளைப் பதிவு செய்தனர்: விடுபட்டவர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வாய்ப்பு

ந. சரவணன்

வேலூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என இதுவரை 2,895 பேர் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா நோயால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் வந்து வாக்குகளை செலுத்த முடியாதததால் அவர்களுக்கான வாக்குகளை தபால் மூலம் செலுத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் தபால் வாக்கு செலுத்த விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், மாவட்டம் முழுவதும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் என மொத்தம் 3,178 பேர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, தபால் வாக்குகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிக்கும் தனித்தனி குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்றுஅவர்களிடம் தபால் வாக்குளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏப்ரல் 26-ம் தேதி மற்றும் 28-ம் தேதி என 2 நாட்களில் தபால் வாக்குகளை செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் பிரிவு அறிவித்தது. அதன்படி 2 நாட்களில் 2,895 பேர் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இது குறித்து வேலூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 3,178 பேர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்காக தபால் வாக்குகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில், 5 தொகுதிகளில் முதல் நாளில் 2,422 பேரும், 2-வது நாளில் 473பேர் என மொத்தம் 2,895 பேர் தபால் வாக்களித்தனர். 63 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதம் 220 பேர் உள்ளனர். அவர்கள் தங்களது வாக்குகளை இதுவரை செலுத்தாமல் உள்ளதால் அவர்கள் மார்ச் 31-ம் தேதி தங்களது வாக்குகளை செலுத்த மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்’’என்றனர்.

SCROLL FOR NEXT