சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் தனது பிரச்சாரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு, ஆதரவற்ற நிலையில் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்தார். வேட்பாளரின் மனிதநேயத்தைப் பலரும் பாராட்டினர்.
தமிழக மக்கள் மன்றத் தலைவரான ராஜ்குமார் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு சமூகச் சேவைகள் செய்து வருகிறார். மேலும், தனது அமைப்பு மூலம் மாநிலம் முழுவதும் ஆதரவற்ற நிலையில் இறந்த 125 பேரின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
இந்தத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் சார்பில் காரைக்குடி தொகுதி வேட்பாளராக ராஜ்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் காரைக்குடி பகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக ராஜ்குமாருக்குத் தகவல் கிடைத்தது.
தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்ற அவர், ஆதரவற்ற நிலையில் இறந்தவரின் உடலுக்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து, மயானத்தில் நல்லடக்கம் செய்தார். வேட்பாளர் ராஜ்குமாரின் மனிதநேயச் செயலைப் பலரும் பாராட்டினர்.