தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, 2 நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. ஆழிப்பேரலை, தானே புயல் ஆகியவற்றின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில், இயற்கை மீண்டும் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.
தமிழக அரசு நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழு முகாமிட்டிருப்பதாகவும் தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் அறிவித்துள்ளதற்கு முதல்வ ருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உதவியை மேலும் அதிகரித்து வழங்க வேண்டும்.
வேளாண் பயிர்கள், முந்திரி, பலா உள்ளிட்ட பணப் பயிர்கள், உயிரிழந்த கால்நடைகள், மீன் பிடி படகுகள் உள்ளிட்ட இதர உடமைகளை இழந்தோருக்கும் அரசு உதவி வழங்கிட வேண்டும். தொடர்ச்சியாக இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மாவட்டத்தை, பேரிடர் பாதிப்பு மாவட்டமாக மத்திய அரசு அறிவிப்பதோடு, நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.