தமிழகம்

தரங்கம்பாடி அக்னீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, நல்லாடை என்னுமிடத்தில் உள்ள சுந்தரநாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, நல்லாடை என்னுமிடத்தில் உள்ள பரணி நட்சத்திர பரிகார கோயிலான சுந்தரநாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் சிதிலமடைந்து இருப்பதால், சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குக்கு பதிலளித்த கோயில் செயல் அதிகாரி, கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட மற்றும் மாநிலக் குழுக்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும், உயர் நீதிமன்றக் குழுவின் ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றக் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 12 வாரங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தது.

SCROLL FOR NEXT