முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டுமென தமிழகம் முழுக்க அலை வீசிக்கொண்டிருக்கிறது என்று தருமபுரி மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர், தருமபுரி 4 சாலை சந்திப்பு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரம் செய்தார். அவர் பேசியது:
70 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு ஒரு விவசாயி முதல்வராக கிடைத்துள்ளார். எளிமை வாய்ந்த அவர் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமன்றி தமிழக விவசாயிகள் அனைவரும் விரும்புகின்றனர். ஒரு விவசாயி தமிழகத்துக்கு மீண்டும் முதல்வராக வர வேண்டும் என தமிழகம் முழுக்க ஒரு அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஆளுமை, நிர்வாகம் என எதுவுமே தெரியாத ஸ்டாலினுக்கு முதல்வராக என்ன தகுதி உள்ளது. ஸ்டாலினை தமிழக மக்கள் யாருமே ஆதரிக்கவில்லை. எதிர்கட்சி தலைவராகக் கூட சரிவர செயல்படாத ஸ்டாலின் தமிழக முதல்வராக வர வேண்டுமா? திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது.
திமுக ஆட்சிக்கு வந்தாலே கொள்ளை தான். எனவே, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு பேசினார்.