தேர்தல் மற்றும் கரோனா பரவல் காரணமாக உடனடியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சில நாட்கள் கட்டுக்குள் இருந்த கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டு, தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மதுபானக் கடைகளில் கூட்டம் சேரும் என்றும், கரோனா ஹாட் ஸ்பாட்டாக அவை மாறிவிடக் கூடாது என்பதாலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மார்ச் 22 முதல் ஏப்ரல் 6 வரை மூடும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஏப்ரல் 4, 5, 6 தேதிகள் மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தப் பல்வேறு விவகாரங்கள் உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையிலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையிலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.