திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், அதே தொகுதியின் அமமுக வேட்பாளருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை திருமங்கலம் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ஆதிநாராயணன். இவர், மருது சேனை இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
திருமங்கலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதிநாராயணன் மீது டி.கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஆதிநாராயணன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், மார்ச் 14-ல் அமைச்சர் உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரசியல் உள்நோக்கத்துடன் போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் மீது 18 வழக்குகள் உள்ளன என்றார்.
இதையடுத்து, மனுதாரர் திருமங்கலம் தொகுதி வேட்பாளராக இருப்பதால், தேர்தல் பணியை கருத்தில் கொண்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் இனிமேல் தனி நபர்களை தாக்கி பேசமாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
இதை மீறினால் மனுதாரர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.