தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சேலத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு (மார்ச் 23) சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று (மார்ச் 24) காலை சேலத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் பணிகள் எவ்வாறு உள்ளன, பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இன்று மாலை 4 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதல்வர் இன்று காலை கரூர் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியில் போட்டியிடுவதால் விஐபி அந்தஸ்து பெற்றுள்ள தொகுதியாக உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடப்பாடி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்குத் தயாராகி வருகிறார்.
சேலத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும், கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமென முதல்வரும், துணை முதல்வரும், கட்சி நிர்வாகிகளுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.