பிரதம மந்திரி மீன்வளத்துறை திட்டத்தின் கீழ், நீலப் புரட்சியை, நீடித்த வளர்ச்சியாக மாற்றும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ரூபாய் இருபதாயிரம் கோடிக்கும் அதிகமாக, அனைத்து கடல் சார் மாநிலங்களிலும் முதலீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறை இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து திமுக மக்களவைதலைவர் டி.ஆர்.பாலு அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறை இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கியிடம், இந்திய மீனவ சமுதாயத்தைப் பாதுகாக்க, வரைவு தேசிய மீன்வளக் கொள்கையில், மத்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், மாநில அரசின் கருத்துக்கள் கேட்கப்பட்டதா? என்றும், கடல்சார் உணவு ஏற்றுமதியின் மூலம், அந்நியச் செலவாணியைப் பெருக்க, ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? என்றும், மக்களவையில் நேற்று (23 மார்ச் 2021) டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறை இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி அளித்த பதில்:
“அடுத்த பத்தாண்டுகளுக்கு, மீன்வளத் துறையின் நீடித்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், அனைவரின் கருத்துகளையும், மாநில அரசின் ஆலோசனைகளையும், கேட்ட பின்னரே, வரைவு தேசிய மீன்வளக் கொள்கை, 2020 நடைமுறைக்கு வரும்.
மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறையின், இணையதளத்தில், வரைவு தேசிய மீன்வளக் கொள்கை, 2020 குறித்த, அனைவரின் கருத்துகளையும் பெறும் வகையில், 11 மாநில மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி மீன்வளத்துறை திட்டத்தின் கீழ், நீலப் புரட்சியை, நீடித்த வளர்ச்சியாக மாற்றும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ரூபாய் இருபதாயிரம் கோடிக்கும் அதிகமாக, அனைத்து கடல் சார் மாநிலங்களிலும் முதலீடு செய்யப்படும்”.
இவ்வாறு பிரதாப் சந்திர சாரங்கி பதிலளித்துள்ளார்".
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.