தமிழகம்

9 முதல் 11-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: அரசாணையை ரத்து செய்ய நீதிபதிகள் மறுப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 9 முதல் 11-ம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்றுஅறிவிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்.25-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதை ரத்துசெய்யக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘இதுதொடர்பாக முன்கூட்டியே எந்தவொரு கலந்தாலோசனையும் நடைபெறவில்லை. பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் 11-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் விரும்பும் பாடத்திட்டத்தை தேர்வு செய்யவும், பள்ளிகள் அந்த பாடத்திட்டத்துக்கு சேர்க்கை வழங்கவும் ஏதுவாக அமையும்’’ என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகே முடிவுகள்எடுப்பார்கள். எனவே இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய முடியாது’’ என தெரிவித்தனர்.

அதேசமயம், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்கு செல்லும்மாணவர்கள், தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடத்திட்டத்தை தேர்வுசெய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறிய பள்ளிகள்அளவில் தேர்வு நடத்திக் கொள்ளலாம் எனவும், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

11-ம் வகுப்புக்கு செல்லும்மாணவர்கள், தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடத்திட்டத்தை தேர்வுசெய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறிய பள்ளிகள்அளவில் தேர்வு நடத்தலாம்.

SCROLL FOR NEXT