திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில், சூரபத்மனை வதம் செய்து ஆட்கொண்டார் சுவாமி ஜெயந்திநாதர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜையும், தொடர்ந்து ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடந்தது.
பின்னர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை யில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்தார். மாலை 4 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹாரத்துக்காக சஷ்டி மண்டபத்தில் இருந்து கடற் கரைக்கு சுவாமி ஜெயந்திநாதர் புறப்பட்டார். 5 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் தொடங்கியது. கோயில் தொடங்கி, நாழிக்கிணறு தாண்டி கடற்கரையெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளம் அலைமோதியது.
அரோகரா.. கோஷம்
முதலில் கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமியை மூன்று முறை எதிர் வந்து போரிட்டான். அவனை மாலை 5.19 மணிக்கு ஜெயந்திநாதர் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.39 மணிக்கும், மூன்றாவதாக சுயரூபத்துடன் போரிட்ட சூரபத்மனை 5.53 மணிக்கும் வதம் செய்து, தன்னுள் ஆட்கொண்டார். அப்போது பக்தர்கள் எழுப்பிய ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..’ என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.
விரதம் நிறைவு
கோயிலிலும், தங்கள் வீடுகளிலும் கடந்த 6 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள், சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், சொக்கலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், மாநகராட்சி மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சூரசம்ஹாரம் முடிந்தும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்து, திருக்கோயில் சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன் சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன. இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.