புதுச்சேரியில் புதிதாக 60 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் இன்று (மார்ச் 20) வெளியிட்ட தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 1,345 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-39, காரைக்கால்-19, மாஹே- 2 என மொத்தம் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 322 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 189 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 164 பேரும் என 353 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 674 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் உள்ளது. இன்று புதிதாக 24 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 295 (97.45 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 18 ஆயிரத்து 85 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், 6 ஆயிரத்து 633 முன்களப் பணியாளர்களுக்கும், 15 ஆயிரத்து 804 பொதுமக்களுக்கும் என 40 ஆயிரத்து 522 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.