கரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பு ஏற்பட்டதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுபடுத்த முடியவில்லை என கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளராக கோத்தகிரியை சேர்ந்த தோட்ட அதிபர் மு.போஜராஜன் போட்டியிடுகிறார்.
உதகை சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களாக கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தலைமையில், மகேஷ், மைசூரு மாநகர பாஜக தலைவர் ஸ்ரீவஸ்தவா, குண்டல்பேட் எம்எல்ஏ நிரஞ்சன் மற்றும் கர்நாடகா கோட்ட ஒருங்கிணைப்பு செயலர் ரவிசங்கர் ஆகிய 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் மற்றும் பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் ஆகியோர் இன்று மாலை உதகை மறை மாவட்ட ஆயர் அ.அமல்ராஜை சந்தித்து ஆசி பெற்றனர்.
பின்னர் கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அண்டை மாநிலமான கர்நாடகாவில் தேர்தல் இல்லாததால், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எங்கள் வேட்பாளர் மு.போஜராஜனை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பாஜக வேட்பாளர் போஜராஜனுக்கு ஆதரவு பெற அனைத்து சமுதாய மக்களையும் நேரில் சந்திந்து வருகிறோம். அதன் பேரில் இன்று உதகை மறைமாவட்ட ஆயரை சந்தித்து ஆதரவு கேட்டோம். இதே போல அனைத்து சமூதாய மக்களையும் சந்திந்து ஆதரவு கேட்கவுள்ளோம்.
உதகை தொகுதியில் 10 முதல் 15 சமுதாயங்கள் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக உதகையில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை சந்தித்து, அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து, இவற்றிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்.
கரோனா காலக்கட்டத்தில் பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டது. அந்த காலக்கட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தைக் கட்டுபடுத்த முடியவில்லை. தற்போது சில மாதங்களாக தான் பொருளாதாரம் மீண்டு வருவதால், விலை ஏற்றம் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.