தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பணியை விரிவுபடுத்தும் வகை யில், மினி கிளினிக்குகளில் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கவும் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன்தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். தமிழகம் சார்பில் இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் தலைமையில், கரோனா தொற்று தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் அ.சிவஞானம், சென்னை மாநகராட்சி சுகாதார பிரிவு இணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், நகர சுகாதார அலுவலர் ஜெகதீசன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும்நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்த, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 761 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும்,தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனை களுக்கும் இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக அளவில் பரிசோதனை
தடுப்பூசி பணிகளில் அனுபவம்மிக்க ரோட்டரி கிளப் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்கலாம். அதிகஅளவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து தொற்று இருந்தால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு தெருவில் அல்லது ஒரு குடியிருப்பில் 3 பேருக்கு மேல்தொற்று இருந்தால் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அங்குள்ள அனைவருக்கும், வெளியில் இருந்து வருபவர்களுக் கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் பொது குழாய்கள் இருக்கும் இடம்,குடிநீர் விநியோகிக்கும் தொட்டிகள், பொதுக் கழிப்பிடம் போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மாவட்ட நி்ர் வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
கரோனா கண்காணிப்பு மையங்களில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்கவும், அவர்களுக்கு உணவு போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.