திருமங்கலம் தொகுதி மக்களுக்காக என் தந்தையை அர்ப்பணித்துவிட்டோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள், பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர், பேரையூர், கள்ளிகுடி, மைக்குடி ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை ஆதரித்து அவரது மகள் பிரியதர்சினி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிஇ பட்டதாரியான பிரியதர்சினி, ஆர்பி.உதயகுமாரின் `அம்மா சாரிடபிள் டிரஸ்ட்' அமைப்பின் செயலாளராக உள்ளார். இதுவரை அம்மா சாரிடபிள் டிரஸ்ட்-ன் விழாக்களில் மட்டுமே தலைகாட்டிய பிரியதர்சினி, அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை. இவர் தற்போது திருமங்கலம் தொகுதியில் தந்தைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார்.
நேற்று பேரையூர் பகுதியில் பேசிய பிரியதர்சினி, ‘‘என் தந்தை 24 மணி நேரமும் தொகுதி மக்களின் நலனைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பார். எனது குடும்பத்தினர் அனைவருமே திருமங்கலம் தொகுதி மக்களுக்காக எனது தந்தையை அர்ப்பணித்து விட்டோம். அவர் உங்களைப் பார்த்துக் கொள்வார். நீங்கள் அவரை வெற்றிபெற செய்யுங்கள்’’ என்றார்.
தொடர்ந்து, அப்பகுதியில் வயல்வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட பணிகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார்.