‘‘இங்கு சாமிக்கு அரசியல் பேச கட்சி இருக்கிறது. ஆனால் பூமிக்கு பேச கட்சிகள் இல்லை,’’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அவர் சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மல்லிகாவை ஆதரித்து பேசியதாவது: இந்தியாவின் முதல் பெண் போராளியான வேலுநாச்சியாரின் வரலாற்றை மறைத்து ஜான்சிராணியை முன்னிருத்தியுள்ளனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக நுழைவாயிலில் வேலுநாச்சியார் உருவ சிலையை வைத்து வரவேற்போம்.
மருதுபாண்டியர்களுக்கு இம்மண்ணில் சிலை வைப்போம். இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளை போகிறது. இங்கு சாமிக்கு அரசியல் பேச கட்சிகள் உள்ளன. ஆனால் பூமிக்கு அரசியல் பேச கட்சிகள் இல்லை.
அதற்காக தான் நாங்கள் இருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டவர்களால் மாற்றம், முன்னேற்றம், ஏற்றம் எதுவும் இல்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. ஆனால் அடைந்த முன்னேற்றம் என்பது எதுவும் இல்லை. இயற்கையை தின்று தீர்த்துவிட்டார்கள். அதனை மாற்ற நாங்கள் நினைக்கிறோம், என்று பேசினார்.