தமிழகம்

சீட் கிடைக்காததால் இந்திய கம்யூ., வேட்பாளருக்கு எதிராக களமிறங்கும் போட்டி வேட்பாளர்

இ.ஜெகநாதன்

சிவகங்கை தொகுதியில் சீட் கிடைக்காததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரனுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் போட்டி வேட்பாளராக களமிறங்கினார்.

திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குணசேகரனுக்கு சீட் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சீட் கிடைக்காத அதிருப்தியில் அக்கட்சியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் சிவகங்கை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றார்.

பிறகு அவர் சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். இந்த தேர்தல் உட்பட 4 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கையில் போட்டியிட்டுள்ளது.

நான்கு முறையும் எனக்கு வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை. அதனால் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எனக்கு கட்சியில் பலரது ஆதரவு உள்ளது. இந்த தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெறுவேன், என்று கூறினார்.

SCROLL FOR NEXT