புதிது புதிதாக உருவாகும் தயாரிப்பாளர் சங்கங்களால் பெயர் குழப்பம் ஏற்படுகிறது. மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் சங்கப் பதிவை ரத்து செய்யவேண்டும் எனக் கோரப்பட்ட வழக்கில் சங்கங்களின் பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கவுரவச் செயலாளர் மன்னன் தாக்கல் செய்த மனுவில், 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாகச் செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரிலும், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரிலும் புதிய சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சங்கங்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப்படி, ஒரு சங்கத்தின் பெயரை ஒத்த பெயருடன் எந்தச் சங்கத்தையும் பதிவுசெய்யக் கூடாது என்பதால், இரு சங்கங்களின் பதிவை ரத்து செய்யக் கோரி சென்னை சங்கங்கள் பதிவாளர்களுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தனது மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுவுக்கு ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சென்னை தெற்கு மற்றும் மத்திய மாவட்ட சங்கங்கள் பதிவாளர்களுக்கும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் உத்தரவிட்டுள்ளார்.