சட்டப்பேரவைத் தேர்தலில் கீழ்வேளூர் தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் நாகை மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் (தனி) தொகுதியும் ஒன்று. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் பாமக சார்பில் வேத.முகுந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வேட்பாளரை மாற்றி அறிவித்துள்ளது பாமக.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“தமிழகத்தில் வரும் ஏப்.06 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேத.முகுந்தன் மாற்றப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பாமக வேட்பாளராகப் போட்டியிடுவார் என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.