மாற்றுத் திறனாளி புதிய வாக்காளர்களுக்கு, வாக்களிப்பது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்புமுகாம்கள் நடத்தப்பட்டு 650 மாற்றுத் திறனாளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இதற்கிடையே, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத் திறனாளி புதிய வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்க முகாம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
ஆவணங்கள்
முகாமில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு மையத்தில் அதிகாரிகளிடம் எத்தகைய ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும், வாக்களிக்கும் முறை, வாக்கைப் பதிவு செய்தவுடன் ஒப்புகைச் சீட்டில், தான் வாக்களித்த சின்னம் பதிவாகியுள்ளதா என்று உறுதி செய்து கொள்வதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதேபோல், இந்த வாரம் முழுவதும் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட பல்வேறுவகையான மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்முறை விளக்க முகாம் நடத்தப்பட உள்ளது.