ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட விழாக்களை கோயில் மரபு மற்றும் ஆகம விதிகளின்படி நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்த வேண்டிய பண்டிகைகள் மற்றும் விழாக்களை முறைப்படி நடத்துவது குறித்து முடிவெடுக்க மதத் தலைவர்கள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் ஜூலை மாதம் வரை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறவுள்ள கோயில் விழாக்கள் மற்றும் பண்டிகைகளை எப்படி நடத்துவது என்பது குறித்து, மதத் தலைவர்களுடன் கலந்து பேசி, அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த பிப்.22 அன்று அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் அடங்கிய கூட்டம் கூட்டப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட 5 விழாக்களை மீண்டும் நடத்த முடிவெடுத்துஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விழாக்களை கோயில் மரபு மற்றும் ஆகம விதிகளின்படி விரைவாக நடத்த வேண்டும் என கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.