சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சபரிமலை சீசன், குளிர்காலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் (00627) வரும் 20-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, விருதுநகர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (00625) வரும் 15, 22-ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இதன்படி, திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மேலும், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையே சுவிதா சிறப்பு ரயில் (00626) வரும் 15, 22-ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு இன்று (3-ம் தேதி) தொடங்குகிறது.