தமிழகம்

சரத்குமாரின் சமக, ரவி பச்சமுத்துவின் ஐஜேகவுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு: 154 இடங்களில் மநீம போட்டி

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு, தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தம் நேற்றிரவு கையெழுத்தானது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்தன. இதைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை மக்கள் நீதி மய்யம் தொடங்கியது.

இந்நிலையில், நேற்றிரவு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் சி.கே. குமரவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதன்படி, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு, தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்ற விவரத்தை கூட்டணி கட்சிகள் முடிவெடுத்து அதற்கான பட்டியலை விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் இந்தக் கூட்டணிக்கு புதிதாக ஒரு பெயரை கமல்ஹாசன் இன்று அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT