குடும்பத் தலைவியருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். எதிர்வரும் காலத்திலும் உரிமைத் தொகை உள்ளிட்ட பெண்களுக்கான பலவகைத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்!
பெண்களின் உரிமைகள் கவனத்துடன் எப்போதும் பாதுகாக்கப்படுவதற்கும், அவர்கள் தற்சார்புடன் கூடிய தகுதி மிக்க முன்னேற்றம் அடைவதற்கும் குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம பங்கு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழு, காவல்துறையில் பெண்கள் நியமனம் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தியது தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு. திமுக ஆட்சி மலர்ந்ததும் அனைத்துக் குடும்பத் தலைவியருக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
எதிர்வரும் காலத்திலும் உரிமைத்தொகை உள்ளிட்ட பெண்களுக்கான பலவகைத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.
சமுதாயத்தில் சரி பாதியளவில் உள்ள பெண்ணினத்தைப் பலபடப் பாராட்டிப் பெருமைப்படுத்தி இருக்கிறது தமிழ் இனத்தின் நிரந்தரத்துவம் பெற்ற இலக்கியங்கள். அத்தகைய பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் நாளாம் இன்று இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.