சேலம் சின்னதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் நிச்சயதார்த்தத்துடன் திருக்கல்யாண உற்ஸவம் தொடங்கியது. நேற்று அலமேலு மங்கை தாயார் மற்றும் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மேலும், கோயில் முழுவதும் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 9 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் அலமேலு மங்கை தாயாருக்கும், வெங்கடேச பெருமாளுக்கும் பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. தொடர்ந்து பெருமாள், அலமேலு தாயாருடன் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இன்று (8-ம் தேதி) மாலை 5 மணிக்கு தெப்ப உற்ஸவமும், நாளை (9-ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.