கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற பொதுவுடமை இயக்க தலைவர் கே.பாலதண்டாயுதம் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா உள்ளிட்டோர். 
தமிழகம்

ரஜினியை அரசியலுக்கு இழுத்துவிடும் முயற்சி தோல்வியால் மற்றொரு நடிகரை பாஜக பயன்படுத்த முயல்கிறது: இரா.முத்தரசன் விமர்சனம்

க.சக்திவேல்

ரஜினியை அரசியலுக்கு இழுத்துவிடும் முயற்சி தோல்வியால் மற்றொரு நடிகரை பாஜக பயன்படுத்த முயல்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுவுடமை இயக்க தலைவர் கே.பாலதண்டாயுதம் சிலை திறப்பு விழா இன்று (மார்ச் 7) நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் பேசும்போது, "தமிழத்தில் எப்படியும் கால் ஊன்றிவிடவேண்டும் என அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலில் இழுத்துவிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்ற முயற்சி தோற்றுப்போனது. தற்போது வேறொரு நடிகரை பாஜக பயன்படுத்த முயல்கிறது.

பாஜக, அதிமுக ஒரு அணி என்றால், இவைகளால் உருவாக்ககபட்ட அணி மற்றொன்று. அது மூன்றாவது அணி அல்ல. திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்வதன் மூலம் வகுப்புவாத கும்பலுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்ற பாடம் புகட்ட சபதம் ஏற்போம்" என்றார்.

தொடர்ந்து பேசிய கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா, "அம்பேத்கர் குறிப்பிட்டதைப்போல இந்தியா கூட்டாட்சியை ஏற்றுகொண்ட நாடாக இருக்க வேண்டும்.

ஆனால், மத்திய பாஜக அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது. மாநில நலன்களை எதிர்க்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் ஆற்றல், கொள்கை ரீதியான முயற்சி ஆகியவை அதிமுகவிடம் இல்லை. மோடியுடன் கைகோர்ந்து நின்றுகொண்டு தமிழ்நாட்டின் நலன்பற்றி யாரும்பேச முடியாது.

நடைபெற உள்ள தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்"என்றார்.

SCROLL FOR NEXT