ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யப்படும் கட்டணம் தொகை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு பிறகு ரத்து செய்தால் பணத்தை திரும்பப் பெற முடியாது.
இந்த புதிய நடைமுறை வரும் 12-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ரயில் டிக்கெட் முன்பதிவு ரயில் டிக்கெட் ரத்து மற்றும் கட்டணம் திருப்பியளிப்பு விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வரும் 12-ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது. ரயில் புறப்பட்ட பின் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திருப்பியளிக்கப்படமாட்டாது. ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே பணம் திருப்பியளிக்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்து செய்யப்படும் தொகை ரூ.30 இருந்து 60 ஆக உயர்த்தப்படவுள்ளது. மூன்றடுக்கு ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு தற்போது பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.90 இருந்து ரூ.180 ஆக அதிகரிக்கப்படும். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு இந்த தொகை ரூ.60 இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்படவுள்ளது. இரண்டடுக்கு ஏசி பெட்டிகளுக்கு ரூ.100 இருந்து ரூ.200-ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
காத்திருப்பு பட்டியல், ஆர்ஏசி டிக்கெட்டுகளை பொருத்தவரை, ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே பணம் திருப்பியளிக்கப்படும். அதன்பிறகு, ரத்து செய்தால் பணம் திருப்பியளிக்கப்படமாட்டாது.
தற்போதை முறைப்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்தில் இருந்து 6 மணி நேரத்துக்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால் டிக்கெட்டின் 25 சதவீத தொகை வசூலிக்கப்படுகிறது. புதிய விதிமுறைகளின்படி, 6 மணிநேரம் என்பது 12 மணிநேரமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரத்தில் இருந்து ரயில் புறப்பட்ட 2 மணிநேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, டிக்கெட்டின் 50 சதவீத தொகை தற்போது பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால் மட்டுமே 50 சதவீத பணம் திருப்பியளிக்கப்படும். அதன்பிறகு ரத்து செய்தால் பணம் திருப்பியளிக்கப்படமாட்டாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு, ரயில்வேத் துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பயணிகளுக்கு இணைதளங்கள் மூலம் அதிகளவில் சேவைகள் அளித்தல், புதிய கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, இதற்கிடையே, ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.