தமிழகம்

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படம் மீதான இடைக்கால தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

செய்திப்பிரிவு

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நாளை வெளியாக உள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு விதிக்கபட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரை படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.

அந்த மனுவில், “எனை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டனர். மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என கோரப்பட்டது.

இந்த மனுவை மார்ச் 2-ம் தேதி விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் தரப்பில், “60 லட்சம் ரூபாயை திரும்பி செலுத்தி விட்டோம், மீதமுல்ள்ள 81 லட்சத்து 34 ஆயிரத்து 846 ரூபாயை வருகின்ற ஜூலை 31-க்குள் 12% வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளோம், ஆகவே தடையை நீக்க வேண்டும்”. எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

பணத்தை பெற்றுக்கொண்டதாகவும், படத்தை வெளியிட எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று ரேடியன்ஸ் ஆர்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்கி மனுவை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT