சுவர் இடிந்து விழுந்து விபத்து. 
தமிழகம்

நாமக்கல் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

கி.பார்த்திபன்

நாமக்கல் அருகே பழமையான வீட்டை இடித்து அகற்ற முற்பட்ட போது சுவர் இடிந்து விழுந்தது. இதில், இரண்டு வயது குழந்தை உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அருகே கணக்கத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (65). இவரது மனைவி மல்லிகா (60). இவர்களுக்கு ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில், சின்னதம்பி தனது வீட்டின் அருகே உள்ள பழமையான வீட்டை இடித்து அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இன்று (மார்ச் 04) காலை 11 மணியளவில் வீட்டின் ஓடுகளை அகற்றி விட்டு, சுவரை இடிக்க முற்பட்டபோது திடீரென மண் சுவர் சரிந்து 'சரசர'வென்று கீழே விழுந்தது.

வீடு இடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி பூங்கொடி (55) மற்றும் அவரது இரண்டு வயதுடைய பேத்தி தேவிஸ்ரீ மற்றும் சின்னதம்பி ஆகியோர் மீது சுவர் விழுந்ததில் நிகழ்விடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT