தமிழகம்

5 வயது மகனை நரபலி கொடுத்த தந்தை; உண்மைத்தன்மையை போலீஸார் விசாரிக்க வேண்டும்: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தனது மகனால் உயிருக்கு ஆபத்து என்ற ஜோதிடரின் கூற்றை நம்பி மகனை தீயிட்டு எரித்துக்கொன்ற தந்தையின் செயலை கண்டித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இதன் பின்னணி குறித்து போலீஸார் விசாரிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி வருமாறு:

“தன்னுடைய மகனால் எதிர்காலத்தில் தனக்கு ஆபத்து நேரலாம் என்று ஜோதிடர் கூறியதால், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த தந்தை தனது 5 வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றிருப்பது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

இதன் உண்மைத் தன்மையை காவல்துறையினர் விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நரபலிகளுக்கு இனி இடம் தரக் கூடாது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

- என்ற வள்ளுவப்பெரியார் வரிகளை மனதில் கொள்வோம்”.

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT