பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்கள் பெற புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அமையும்போது இரு கட்சிகளும் கூடுதலாக இடங்களை எதிர்ப்பார்க்கிறது. இதனால் அதிமுகவுக்கு கிடைக்கும் இடங்கள் குறையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் கூடுதல் இடங்களை பெற விரும்பி அதிமுக செயலாளர்கள் அன்பழகன் எம்எல்ஏ, ஓம்சக்தி சேகர், தேர்தல் பிரிவு செயலாளர்கள் வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ, சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் நேற்று சென்னைக்கு சென்று தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் பொறுப்பாளர்கள் எம்.சி.சம்பத், செம்மலை ஆகியோரை சந்தித்தனர்.
இதுபற்றி அதிமுக தரப்பில் விசாரித்தபோது, “கூட்டணியில் கூடுதல் இடங்களை பெற கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினோம். கடந்த காலத்தில் தனித்து போட்டியிட்டாலும் 4 இடத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இம்முறை கூடுதல் இடங்கள் பெற்றால் அதிக இடங்களில் வெல்வோம். அதனால் அதிமுகவுக்கு அதிக இடங்கள் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்” என குறிப்பிட்டனர்.