தமிழகம்

கலைவாணர் அரங்கம் அருகில் ரூ.19 கோடியில் பிரம்மாண்ட அரசு விருந்தினர் மாளிகை: சென்னையில் நவீன வசதிகளுடன் தயாராகிறது

கி.கணேஷ்

சென்னையில் கலைவாணர் அரங்கம் அருகில், ரூ.19 கோடியில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான அரசு விருந்தினர் மாளிகை கட்டப்பட்டு வருகிறது.

சென்னை சேப்பாக்கம் விளை யாட்டு மைதானம் எதிரில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அரசு விருந்தினர் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையில், தமிழகத்துக்கு வரும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்குவது வழக்கம்.

இங்கு போதிய அளவு வசதிகள் இல்லாத காரணத்தால் புதிய அரசு விருந்தினர் மாளிகை கட்ட தமிழக அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, தற்போதைய அரசு விருந்தினர் மாளிகை மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள பகுதிக்கு நடுவில், புதிய அரசு விருந்தினர் மாளிகை பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

இந்த மாளிகை தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பழைய அரசு விருந்தினர் மாளிகைக்கு மாற்றாக புதிய விருந்தினர் மாளிகை, 60 ஆயிரத்து 340 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. இதற்காக அரசு ரூ.19 கோடியை ஒதுக்கியுள்ளது. தரைதளத்தில், வரவேற் பறை மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 16 தங்கும் அறைகளும் (சூட்), முதல்தளத்தில் 16 தங்கும் அறைகளும், இரண்டாம் தளத்தில் 8 தங்கும் அறைகளும் அமைக் கப்படவுள்ளன.

இந்த சூட்களில், நட்சத்திர ஓட்டல் களில் இருப்பது போன்ற குளியல் தொட்டிகளுடன் கூடிய குளியலறை கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர சமையலறை, படிப்பறை, கருத்தரங்க அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த புதிய கட்டிடத்தில் அமைக்கப்படுகிறது. முழுவதுமாக குளிரூட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தின் 70 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளன. அடுத்த சில மாதங்களில் பணிகள் நிறைவு பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT