வாக்களிக்க பணம் வாங்கவில்லை என வாக்களிக்க வருபவர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க உத்தரவிடக்கோரிய வழக்கில், அப்படி உத்தரவிடுவது எங்கள் வேலையல்ல, போய் அரசிடம் முறையிடுங்கள் என மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், ஓட்டுக்கு பணம் பெற வில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரியா பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்பதால், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அது நீதிமன்றத்தின் பணியல்ல எனவும், இதுசம்பந்தமாக மனுதாரர் அரசை அணுகலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.