தமிழகம்

பிரச்சார கூட்ட அனுமதிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெற ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கார்த்திகா பேசியது:

கரோனா தொற்று பரவாமல் இருக்க ஏற்ற வகையில் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கை களிலும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி பெற ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இம்முறையில் இணைய சிக்கல்கள் ஏற்பட்டால் தேர்தல் நடத்தும் அலுவலகத்தை அணுகி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பதற்றமான மிக பதற்றமான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவின்போது சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ராமமூர்த்தி, ரஹமத்துல்லா கான், சங்கர், தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஏடிஎஸ்பி குணசேகரன், டிஎஸ்பி-கள் அண்ணாதுரை, சீனிவாசன், விஜயராகவன், சவுந்தரராஜன், தமிழ்மணி, சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT