பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானவரும் , இயற்கை விவசாயம் செய்து வருபவருமான மூதாட்டி பாப்பம்மாளுடன் பிரதமர் சந்தித்துப் பேசினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ஆர்.ரங்கம்மாள்(105) . இயற்கை விவசாயியான இவருக்கு சமீபத்தில் மத்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு நிகழ்ச்சி மற்றும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள, பிரதமர் நரேந்திரமோடி இன்று (25-ம்தேதி) கோவைக்கு வந்தார்.
பிரச்சாரக் கூட்டம் நடந்த கொடிசியா மைதானம் அருகே, இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டவருமான மூதாட்டி பாப்பம்மாளை சந்தித்து, பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது மூதாட்டியின் இயற்கை விவசாயம் குறித்து பாராட்டிய அவர், அவரது உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.
மூதாட்டி பாப்பம்மாளை சந்தித்தது தொடர்பாக, பிரதமர் அவரது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"பிரதமர் மோடி நீண்ட காலம், ஆட்சி செய்ய வேண்டும் " என மூதாட்டி பாப்பம்மாள் அப்போது பிரதமரிடம் தெரிவித்தார்.