தமிழகம்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது தமிழக அரசின் நிர்வாகக் கோளாறு: கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டு

இ.ஜெகநாதன்

"அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது தமிழக அரசின் நிர்வாகக் கோளாறு" என கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றம்சாட்டினார்.

சிவகங்கை அருகே ஒக்கூரில் காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டியில் மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சியை கார்த்தி சிதம்பரம் எம்.பி., இன்று தொடங்கி வைத்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-யை தொட்டுவிட்டது. அதில், பிரதமர் மோடி செஞ்சுரி அடித்ததால் குஜராத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அவர் பெயர் வைக்கின்றனர். இது தான் தற்போதைய மத்திய அரசின் நிலையாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை கூடி இருந்தபோது கூட பெட்ரோல் விலை குறைவாக தான் இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் வரி மேல் வரி விதித்ததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம். பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததால், அரசுக்கு வருவாய் இல்லாமல் விலையை உயர்த்துகின்றனர்.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்தியது தமிழக அரசின் நிர்வாகக் கோளாறு. ஓய்வு பெற்றால் பென்ஷன் கொடுக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டால் அரசிடம் பணம் இல்லை. அதனால் ஓய்வு வயதை உயர்த்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT