தமிழகத்தில் பட்டாசு தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு ஆலையில் பிப். 12-ல் நடைபெற்ற விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்கவும், இதுபோன்ற விபத்துகளை வருங்காலங்களில் தவிர்க்க விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்க வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.விநாயகன், கே.நீலமேகம், பி.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் வாதிட்டனர்.
பின்னர், தலைமை நீதிபதி, தமிழக அரசு பட்டாசு தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பிப். 12-ல் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.